இங்கிலாந்தில் 80 வயது பாட்டிக்கு லொட்டரியில் விழுந்த பரிசு
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் 80 வயது பாட்டி ஒருவருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
இங்கிலாந்தின் எசெக்ஸில் வாழ்ந்துவரும் ரோஸுக்கு (Rose Tresadern, 80),தன் கணவரான டெரக் (Derek Tresadern, 83) மீது கொள்ளைப் பிரியம்.
டெரக் உடல் நலக் குறைபாடு காரணமாக கடண்ட ஆண்டு மரணமடைந்துவிட்டார். டெரக் உயிருடன் இருக்கும்போது, அவரும் அவரது மனைவியும் 1, 4, 12, 15 மற்றும் 39 என்ற எண்கள் கொண்ட லொட்டரிச்சீட்டு வாங்குவதுண்டு.
தன் கணவர் இறந்தபின்பும், அவர் நினைவாக, அவர் வாங்கும் அதே எண்கள் கொண்ட லொட்டரிச்சீட்டை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் ரோஸ்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியும் அதே எண்களைக் கொண்ட லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார் ரோஸ்.
விடயம் என்னவென்றால், அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
பரிசு விழுந்த மகிழ்ச்சியில் உடனடியாக தன் மகனான பேரியையும் (52), மகள் ஜூலியையும் (57) அழைத்து விடயத்தைச் சொல்லியிருக்கிறார் ரோஸ்.
தங்கள் தந்தை நினைவாக வாங்கப்பட்ட லொட்டரிச்சீட்டு தங்கள் வாழ்வை மாற்றிவிட்டதால் பெருமகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள் பிள்ளைகள் இருவரும்.
ரோஸோ, அவர் இன்னமும் எங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதையே இந்த பரிசு காட்டுகிறது என்கிறார்.
ரோஸால் அதிகம் நடமாட முடியாது. ஆகவே, நல்ல வசதிகள் கொண்ட ஒரு ஓய்வு இல்லத்திற்குச் செல்ல ரோஸ் முடிவு செய்துள்ள நிலையில், தங்கள் தாய் தங்களுக்கு கொடுக்கவிருக்கும் பணத்தைக் கொண்டு என்ன செய்வது என தாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள் அவரது பிள்ளைகள்!























