• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் போட்டுள்ள திட்டம்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் வாழும் புலம்பெயர்ந்தோரின் உரிமை ஒன்றைப் பறிக்க உள்ளது பிரான்ஸ். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஒன்றிலுள்ள இரண்டு தீவுகள், 1973ஆம் ஆண்டு, பிரான்சுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தன. அவை, பிரான்சின் கடல் கடந்த பிரதேசமாக, Mayotte என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு, Mayotte முழுமையாக பிரான்சின் ஒரு பகுதியாக ஆனது.
  
அதே தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த மற்ற தீவுகள் சுதந்திரம் கோரி, தற்போது, Comoros தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த Comoros தீவுகள், வறுமையில் வாடும் தீவுகள் ஆகும். ஆகவே, அந்தத் தீவுகளைச் சேர்ந்த மக்கள், சற்று நல்ல வாழ்வைத் தேடி Mayotteக்குள் நுழைகிறார்கள்.

இதை Mayotteஇல் வாழ்பர்கள் எதிர்க்க, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. Mayotte மக்கள் மாதம் ஒன்றிற்கு 160 யூரோக்களில் காலம் தள்ளுகிறார்கள். இதற்கிடையில், பக்கத்துத் தீவுகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் Mayotteக்கு புலம்பெயர, தற்போது அத்தீவில் வாழ்பவர்களில் பாதி பேர் அக்கம்பக்கத்துத் தீவுகளைச் சேர்ந்தவர்கள்தான் என்னும் நிலைமை அங்கு காணப்படுகிறது.

பிரான்ஸ் சட்டப்படி, Mayotteஇல் வாழும் புலம்பெயர்ந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும், பிரெஞ்சுக் குடியுரிமை கிடைக்கும்.

தற்போது, அந்த உரிமையைப் பறிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. நேற்று Mayotteக்கு சென்றிருந்த பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, இனி, Mayotte தீவில் பிறக்கும் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை கிடையாது. பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இனி பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பை, Mayotteஇல் வாழும் மக்கள் உட்பட அரசியல்வாதிகளும் வரவேற்றுள்ள நிலையில், சிலரோ, இது ஜனநாயகத்துக்கே எதிரானது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply