எட்மண்டன் நகரில் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய நபர்
Two injured in stabbing at Canada's Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், அதாவது, வியாழக்கிழமைதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதற்காக அந்த குருத்வாராவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார், இது இனவெறுப்புத் தாக்குதலா என்பது தெரியவில்லை.
பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் சீக்கியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அந்த குருத்வாரா தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மார்க் கார்னி, காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.






















