380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி
இலங்கை
தமது வங்கியின் சில ஊழியர்கள் மூன்றாம் தரப்பினருடன் கூட்டுச் சதி செய்து செய்த மோசடியை தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மோசடி மூலமாக வங்கிக்கு சுமார் ரூ. 380 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு அளித்த ஒரு அறிவிப்பில், இந்த விவகாரம் விசாரணை மற்றும் தேவையான நடவடிக்கைக்காக சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு உடனடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது மோசடியின் சரியான அளவைக் கணக்கிட இயலவில்லை என்றும், நடைபெற்று வரும் குற்றவியல் விசாரணைகள் மற்றும் உள்ளக விசாரணைகளின் முடிவைப் பொறுத்து இறுதித் தொகை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இலங்கை மத்திய வங்கிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைக்கவும், பொறுப்பானவர்களைப் பொறுப்பேற்கச் செய்யவும் அனைத்து ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் வங்கி கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்தபோதிலும், வைப்புத்தொகைகளும் கணக்கு இருப்புகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், வங்கியின் தற்போதைய செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்தது.
இந்த அறிவிப்பை, வங்கியின் பணிப்பாளர் குழுவின் சார்பாக, துணைத் தலைவரும் நிறுவனச் செயலாளருமான ஷெஹானி ரணசிங்க வெளியிட்டார்.






















