• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மோடி, வாஜ்பாய் எனது ஆட்சியில்தான் லாகூர் வந்தனர் - நவாஸ் ஷரீப்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2024 பிப்ரவரி 8 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் முகமது நவாஸ் ஷரீப் (73). மூன்று முறையும், இவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பல்வேறு காரணங்களால் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷரீப், அடுத்த வருட தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

1999ல் இந்தியாவிற்கு எதிராக ஜெனரல் முஷாரப் கார்கில் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நான் எதிர்த்தேன். அதனால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

இந்தியாவுடன் நேர்மறையான உறவு வேண்டும் என விரும்புபவன் நான். 3 முறை பிரதமராக இருந்த போதும், நியாயமற்ற காரணங்களுக்காக பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்.

எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய் அவர்களும் (1999), மோடி அவர்களும் (2015) பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எந்த அதிபரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததில்லை.

தனது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகள் எங்களுடன் வருத்தத்தில் இருந்தால் உலக அளவில் மதிப்புமிக்க நாடாக நாங்கள் எப்படி மாற முடியும்? நாங்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் சுமூக உறவு நிலவுவதையே விரும்புகிறோம்.

இவ்வாறு ஷரீப் கூறினார்.

நவாஸ் ஷரீப்பின் இந்த கருத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் நல்ல நோக்கமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
 

Leave a Reply