• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

இலங்கை

அம்பாறை மாவட்டம்,  நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளதாகப் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பால் பிடிக்கும் பருவத்திலும்,  வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட நெற்பயிர்கள் பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன் தொடர் மழையால் வயல்வெளிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,  நீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வடிகான் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வயல்களிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு,  உரம் மற்றும் விதை நெல் செலவுகளுக்கு மத்தியில் கடன் பட்டாவது சிறுபோகஃபெரும்போகச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்நிலைமை பெரும் பொருளாதார பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பாதிப்புக்குள்ளான வயல்நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கமநல சேவை அலுவலர்களும் உடனடியாகப் பார்வையிட்டு,  பயிர்ச்சேத மதிப்பீடுகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன்,  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply