நாட்டிற்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க விமானப்படையிலிருந்து பதவி உயர்வு
இலங்கை
சமீபத்தில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியன்களைத் தோற்கடித்து, இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கொர்பொரல் ருமேஷ் தரங்க இலங்கைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (05) விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
தாய்நாட்டிற்குப் பெரும் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும், அவரது முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி, ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க, அவரை கொர்பொரல் பதவியிலிருந்து சார்ஜென்ட் பதவிக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மேலும், விமானப்படைத் தளபதி ருமேஷ் தரங்கவிற்கு ஒரு சிறப்பு நிதிப் பரிசை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குப் பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்கல்வி கொர்பொரல் வந்திமா குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவருக்குப் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.





















