• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை வழங்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் இந்த நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதுடன்,

ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும்இந்தப் பணிகள் தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலைகளுக்கான புதிய தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.8 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் என்பன பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் காலை 7.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply