• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவை அதிர வைத்த கொள்ளை - தமிழர் உட்பட அறுவர் அதிரடி கைது 

கனடா

கனடாவின் (Canada) டொராண்டோ (Toronto) பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணய கொள்ளையுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா (Nissan Duraiyappa) தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற கொள்ளையுடன் தமிழர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி கனடாவின் (canada) பிரம்டனை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை கடத்தியமை, கொள்ளைச் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவியமை, பங்களிப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரசாத் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

65 ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரசாத் பரமலிங்கம் அதற்கான நிதி உதவி வழங்கியதாக அமெரிக்க பொலிஸார் (American Police) சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் புளொரிடா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியே, ஆயுதங்களை கடத்திய வாகனத்தையும் செலுத்தியுள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகவும் பாரியளவிலான விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா (Nissan Duraiyappa) தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்த விசாரணையாளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவியவர்கள் மற்றும் ஏனைய சட்டத்துறை சார்ந்தவர்களை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கொள்ளைச் சம்பவம் எயார் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் துரந்தே கிங்-மக்லீன், பிரசாத் பரமலிங்கம், அர்ச்சிட் குரோவர், அர்சலன் சௌத்ரி, பிராம்ப்டன் , ஓக்வில்லியைச் சேர்ந்த அமித் ஜலோட்டா, ஜார்ஜ்டவுனைச் சேர்ந்த அம்மாட் சவுத்ரி மற்றும் டொராண்டோவைச் சேர்ந்த அலி ராசா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச துப்பாக்கி கடத்தல் கும்பலுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டொராண்டோவில் (Toronto) உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில்  (Air Canada) வைத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 20 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கமும் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. 20 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தில் 89000 டொலர் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகியதுடன் இதுகுறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply