• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் - 17 வயது இளைஞன் கைது

இலங்கை

விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

பாரிய குற்றச்செயல் ஒன்றுக்கு தயாரான சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோதே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பை நடத்தியுள்ளனர்.

இதன் போது கூரிய ஆயுதங்கள், மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால், விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால், விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய 17 வயதுடைய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனத் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply