• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய உள்ளக நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சியின் அரசியல் பீடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga) தலைமையில் இன்று(08.04.2024) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தது.

இருந்தபோதிலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க விரும்புவதாக சிறிசேன பதிலளித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து பல ‘முக்கியமான’ கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, மருதானை பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகள் காரணமாக, கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசிப்பது சகலருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய அரசியல்பீடக் கூட்டம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply