பத்மினி எவ்ளோ அழகு தெரியுமா?
சினிமா
அப்போது நான் தினமலரில் வேலைப் பார்த்த நேரம்.பத்மினி மயிலாப்பூருக்கு வந்திருப்பதாகவும் அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்றும் சொன்னதும் நானே அதை செய்கிறேன் என்றேன். ஏதோ ஒரு வித ஆவல் என்னுள் இருந்தது.காரணம் என் அம்மாவாக இருக்கலாம்.அவளுக்கு பத்மினி என்றால் உயிர்.
என் சித்தப்பா மதுரா கோட்ஸில் இருந்தபோது ஒவ்வொரு வாரமும் க்ளப்பில் படம் போடுவார்கள். நாங்கள் சம்மர் லீவுக்காக போயிருந்த போது வியட்நாம் வீடு படம் போடுகிறார்கள் என்றதும் எங்கம்மா அடைந்த சந்தோஷம் இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.
"பத்மினி எவ்ளோ அழகு தெரியுமா?"
படம் பார்த்துக் கொண்டிருந்த போது கூட யாரும் எதுவும் கேட்கவில்லை.ஆனால் இன்ட்ரவேல் விட்டதும் "அம்மா..பத்மினி எப்பமா வருவாங்க?" என்று கேட்டோம். அவ்வளவு தான். அம்மாவின் கண்களில் கண்ணீர் வராத குறை தான்.
"படத்தோட ஹீரோயினே பத்மினி தான்."
அத்தோடு என் தம்பியெல்லாம் கிளம்பி வீட்டுக்குப் போய் விட்டான். மயிலாப்பூரில் அவர் வீட்டைக் கண்டுப் பிடிப்பது பெரிய கஷ்டமாயில்லை.யாரைக் கேட்டாலும் சொன்னார்கள்.காலிங் பெல்லை அழுத்தியதும் பாதிக் கதவு திறந்தது."யாரு"என்று கேட்ட பெண்ணிடம் யார் என்று சொன்னதும் மீதிக் கதவும் திறந்தது.
உள்ளேயிருந்து வந்தப் பெண் முழு விபரத்தையும் கேட்டுக் கொண்டிருந்த போதே வெள்ளை வெள்ளேரென ஒரு பெண்மணி நைட்டியில் வந்து "என்ன?" என்று கேட்டார்.என்னை உட்கார வைத்து விட்டு அந்தப் பெண்மணியை உள்ளே கூட்டிட்டுப் போனார்கள். லைம் ஜூஸ் வந்தது.
ஆயிற்று. முக்கால் மணி நேரம் தாண்டியதும் அந்த பரந்தஹாலைத் துடைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் "எங்க அவங்க"னு கேட்டேன்.
"கிளம்புறாங்க" என்ற போதே பத்மினி கைத்தாங்கலாக நடந்து வந்தார். நான் அப்போது பார்த்த பெண் தான் புடவை கட்டி ஒப்பனை செய்திருந்தார். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அலுக்காமல் பதில் சொன்னார்.சிவாஜியின் மேல் தனிப்ரியம் வைத்திருந்ததை மனதார பேசினார்.என்னையே உற்றுப் பார்த்தவர் "நீ லிப்ஸ்டிக் போட்டுக்கிரதில்லையா?" என்றார்.
இல்லை என்றேன். போட்டுக்கோ.எனக்கு லிப்ஸ்டடிக்னாலே உயிர். வகை வகையா வச்சிருக்கேன்" என்றவர் என் எல்லா கால்விரல்களிலும் அப்போது மெட்டி அணிந்திருந்ததைப் பார்த்து,"அழகா இருக்கு" என்றார்.
போட்டோவுக்கு போஸ் கொடுத்த போது,"வாம்மா..நீயும் என் கூட போட்டோ எடுத்துக்கோ" என்றார்.கைகளை என் தோள் மேல் அணைத்தாற் போல் வைத்துக் கொண்டார்.எனக்கொரு அம்மா இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றிற்று.ஆபிசில் போட்டோவை கணினியில் ஏற்றும் போது ராஜி"இத பத்திரமா வச்சிரு" என்றாள்.
ஆனாலும் தொலைத்த பலவற்றில் அதுவும் சேர்ந்து கொண்டு விட்டது.
Dhanmayanthi