• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக தலைவர்கள் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் - நவால்னி மனைவி வலியுறுத்தல்

ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார். அவர் 88 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக சிறையில் மரணமடைந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா, அதிபர் புதினுக்கு எதிராக தனது கணவரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் புதின் பெற்ற வெற்றி தொடர்பாக யூலியா நவல்னயா கூறியதாவது:

தேர்தல் முடிவுகள் ஒரு பொருட்டல்ல. உலகில் யாரும் புதினை முறையான அதிபராக அங்கீகரிக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவருடன் உலக தலைவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு மேசையில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் அவர் ரஷியாவின் முறையான அதிபர் அல்ல. புதின் எங்கள் அதிபர் அல்ல என்பதை நாங்கள் மற்றவர்களுக்கும் நிரூபித்துள்ளோம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் புதின் ஆட்சியை எதிர்த்துப் போராட மக்களை வலியுறுத்துகிறேன்.

நமக்கு அமைதியான, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான ரஷியா தேவை. நாம் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும். இதை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
 

Leave a Reply