• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..

சினிமா

கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையில் செய்த அற்புதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பாடலுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு என இரு கலவைகளாக இயலா... இசையா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைக் கொடுத்தவர்கள்.

வெறும் ‘காய்‘ என்ற வார்த்தையை வைத்து ‘அத்திக்காய் காய் காய்.. ஆலங்காய்..‘ என்ற பாடலும், தேன் என்ற வார்த்தையை வைத்து ‘பார்த்தேன்.. சிரித்தேன்.. பக்கம் வரத் துடித்தேன்..‘ போன்ற அழகான பாடல்களைக் கொடுத்து மிரளவைத்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்த அடுத்த சாவல் தான் ஒரு எழுத்தில் பாடல் வேண்டும் என்பது.

1977-ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம்தான் பட்டினப் பிரவேசம். டெல்லி கணேஷ் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். மேலும் இந்தப் படத்தில் சிவசந்திரன், ஜெய்கணேஷ், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இந்தப் டத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் தான் ‘வான் நிலா.. நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா‘.

இந்தப் பாடல் வருவதற்குரிய கதைக் களத்தை எம்.எஸ்.வி-யிடம் பாலச்சந்தர் சொல்ல எம்.எஸ்.வி. லா லலா என்று டியூன் போட்டிருக்கிறார். இதைக் கேட்ட கண்ணதாசன் என்ன இது லா..ல.லலா என்று போட்டிருக்கீங்க.. தமிழ்ல இத்தனை ‘லா‘-க்கு எங்க போறது என்று கேட்டு கோபத்துடன் எழுந்து போய் விட்டார்.

அதன்பிறகு எம்.எஸ்.வி கண்ணதாசனை இப்போ நீங்க பாட்டு எழுதலன்னா நீங்க கவிஞரே இல்ல என்று அவரை ஏற்றி விட கோபத்தில் கண்ணதாசன் மளமளவென ‘லா‘ எழுத்தில் உதிர்த்த பாடல் தான் இது.

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
தேன் நிலா எனும் நிலா-என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

என்று பாடல் முழுக்க வெறும் ‘லா‘ என்ற எழுத்தையே பாடலாக்கி அனைவரையும் வியக்க வைத்தார் கண்ணதாசன். இந்தப் பாடல் இன்று வர கிளாசிக் ஹிட் பாடலாகத் திகழ்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply