• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு வாரம் முகாமிட்ட சீனாவின் கப்பல் மாலத்தீவில் இருந்து புறப்பட்டது

இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சியாங்யாங் ஹாங்-03 என்ற உளவுக்கப்பல் மாலத்தீவை நோக்கி வந்தது.

4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது. இந்திய பெருங்கடல் வழியாக சென்ற சீன உளவுக்கப்பல் கடந்த 22-ந்தேதி மாலத்தீவை சென்றடைந்தது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து மேற்கே 7.5 கி.மீ. தொலைவில் உள்ள திலா புஷி துறைமுகத்தில் சீன உளவுக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டது.

உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த சீன கப்பல் நுண்ணுயிர் மரபணு ஆய்வு, உப்புத் தன்மை, நீருக்கடியில் கனிம ஆய்வு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் ஒரு வாரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீன கப்பல் மாலத்தீவு கடற்கரையை விட்டு வெளியேறியதாக மாலத்தீவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்ட போதிலும் கப்பலின் கடைசி சிக்னல் மாலத்தீவின் ஹுல்ஹு மாலே அருகே காட்டின என்றும் தெரிவித்தது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இந்திய படைகள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply