• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் கே.பாக்கியராஜ். 

சினிமா

சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் கே.பாக்கியராஜ். ஆனால், அழகழகான பலர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தை பார்த்ததும் அந்த ஆசை அவரை விட்டு போனது. தனக்கு என்ன வருமோ அதை வைத்து சினிமாவில் முன்னேறுவோம் என முடிவெடுத்தார்.

இதுபற்றி ஒருமுறை பேசிய பாக்கியராஜ் ’என் முகத்துக்கு ஹீரோவாக நடிப்பது செட் ஆகாது என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு எழுத வரும். ஒரளவுக்கு கதை எழுத வரும். எனவே, கதை, வசனம் ஆகியவற்றின் மூலம் சினிமாவில் நுழைவது என முடிவெடுத்தேன். பாராதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தபின் அதைத்தான் செய்தேன்’ என சொல்லி இருக்கிறார்.

அப்படி இருந்தவரை புதிய வார்ப்புகள் படம் மூலம் ஹீரோ ஆக்கினார் பாரதிராஜா. சினிமாவில் நடிப்பதில் பாக்கியராஜுக்கு விருப்பமே இல்லை. படப்பிடிப்பில் கடைசி நேரத்தில் ‘நீதான் இந்த படத்தின் ஹீரோ. நடி’ என சொல்லிவிட்டார். அப்படி பாக்கியராஜ் நடித்த ‘புதிய வார்ப்புகள்’ படம் வெற்றியும் பெற்றது.

அடுத்து தானே ஒரு படத்தை இயக்குவது என முடிவெடுத்தார் பாக்கியராஜ். அப்படி உருவான திரைப்படம்தான் சுவரில்லா சித்திரங்கள். இந்த படத்தின் கதையை பல நடிகர்களிடம் சொல்லியும் யாரும் நடிக்க முன்வரவில்லை. அப்போதுதான் ‘உன்னுடைய புதிய வார்ப்புகள் படம் வெற்றி அடைந்திருக்கிறது. நீயே ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது’ என அவரின் நண்பர்கள் சொல்லவும் அதில் அவரே ஹீரோவாக நடித்தார்.

இந்த படமும் வெற்றி என்பதால் தொடர்ந்து அவரின் கதைகளில் ஹீரோவாக நடிக்க துவங்கினார் பாக்கியராஜ். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாக்கியராஜ் ‘நடிப்புக்காக நான் எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் போல சண்டை போட வராது. சிவாஜியை போல நடிக்க வராது. மற்ற ஹீரோக்களை போல ஹீரோயிசம் செய்யவும் பிடிக்கவில்லை. அதை ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள்.

சுவரில்லா சித்திரங்கள் வெற்றி பெற்ற பின்னரும் எந்த மாதிரியுமான வேடங்களிலும் நாம் நடிக்கலாம் என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் வந்ததில்லை. என்னுடைய பலம், பலவீனம் என்ன என எனக்கு தெரியும். அதற்கேற்ப கதை எழுதி அதில் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தேன்’ என சொல்லி இருக்கிறார் திரைக்கதை மன்னன் பாக்கியராஜ்.
 

Leave a Reply