• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாத்துக்கறி கேட்ட சிவாஜி… நடிகர் திலகத்தின் ரியல் முகத்தைச் சொல்லும் மோகன்லால்…

சினிமா

ஒவ்வொரு நடிகர்ளும் சினிமாவில் தோன்றுவதைப் போலவே அதேபோன்றதொரு குணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று கூறி விட முடியாது. வில்லனாக நடிப்பவர்கள் மிகுந்த நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் ரசிகர்களின் பார்வையில் கொடூர வில்லனாகத் தெரிவார்கள். ஆனால் படத்தில் ஹீரோவாக நல்ல குணங்களுடன் நடிப்பவர்கள் தனிப்பட்ட முறையில் மாறுபட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஏனெனில் மக்கள் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் தமிழக மக்கள் அவர்மேல் தீராத பாசம் கொண்டிருந்தனர். ஆனால் நடிகர் திலகத்தின் தனிப்பட்ட குணங்கள் எப்படி இருக்கும் என்பது அவருடன் கூடப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவ்வாறு நடிகர் திலகத்தின் ரியல் குணங்களை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் மலையாள மனோரமா இதழுக்காக பேட்டி ஒன்றில் அவரது குணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஒருமுறை சிவாஜி சார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது.

சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும். அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள். சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன்.

தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் . குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார்.

அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார். ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ, அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார். அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே, தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை, அது போல மாறி விடுவார். ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.” என்று கூறினார்.

மேலும்வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தாராம். சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . அவர் வீட்டில் அங்கிருந்த சிவாஜியின் புகைப்படங்கள் அவர் வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடந்தபோது ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தது போல மோகன்லாலுக்கு இருந்ததாம். சுற்றிப் சிவாஜி கையில் ஒரு வாட்ச் இருந்தது. அதை நீண்ட நேரம் மோகன்லால் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கவனித்த சிவாஜி அந்த வாட்சை கழட்டி மோகன்லாலின் கையில் கட்டி விடுகிறார்.

இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து எதேச்சையாக பிரபுவை மோகன்லால் சந்தித்திருக்கிறார். சிவாஜி குறித்து பிரபு சொன்னது: அப்போது சிவாஜி வாட்ச் பரிசளித்தது குறித்து பிரபுவிடம் கூறியிருக்கிறார். அதற்கு பிரபு, அந்த வாட்ஸ் அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த வாட்ச். பொதுவாக அவருக்கு பிடித்தது யாருக்கும் கொடுக்க மாட்டார். உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் என்றால் உங்களையும் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம் என்று கூறியிருந்தார். அதைக் கேட்கும்போது மோகன்லாலுக்கு ரொம்ப பெருமையாகவும் இருந்ததாம்.
 

Leave a Reply