• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருணாநிதிக்கு எம்.ஆர்.ராதா கலைஞர் பட்டம் கொடுத்தது இப்படித்தான்!.. சுவாரஸ்ய தகவல்..

சினிமா

அரசியல்வாதி என்பதற்கு முன்பே கதாசிரியர், வசனகர்த்தா என பரிமளித்தவர் கலைஞர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவின் மீது தீவிர அன்பும், மரியாதையும் கொண்டிருந்ததால் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருபக்கம் சினிமாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்து அவர் ஹீரோவாக அறிமுகமான ‘ராஜகுமாரி’ படத்தில் வசனம் எழுதினார். அதன்பின் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த அபிமன்யூ, மந்திரகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களுக்கு கருணாநிதியே வசனம் எழுதினார். அதேபோல், சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கும் கருணாநிதி கதை, வசனம், திரைக்கதை எழுதியிருந்தார்.

பராசக்தி திரைப்படம் கருணாநிதியை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து பல திரைப்படங்களில் அவர் கதை, வசனம் எழுதியிருக்கிறார். பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன் ஆகிய படங்களில் பகுத்தறிவு தூக்கலாக இருக்கும். அதேபோல், புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமாரி, வண்டிக்காரன் மகன் ஆகிய படங்களில் அரசியல் வசனங்கள் அசத்தலாக இருக்கும்.

மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார் ஆகிய படங்களில் சமூக முன்னேற்றம் பற்றிய வசனங்கள் இருக்கும். மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள் ஆகிய படங்களில் பெண்ணுரிமையை பேசியிருப்பார். அபிமன்யூ, பூம்புகார், உளியின் ஓசை ஆகிய படங்களில் இலக்கியம் பேசியிருப்பார்.

கதை, வசனம் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவருக்கு கலைஞர் என்கிற படத்தை கொடுத்தது நடிகர் எம்.ஆர்.ராதா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது எப்படி என்பது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். திராவிட மறுமலர்ச்சி என்கிற பெயரில் நாடகங்களை எம்.ஆர்.ராதா நடத்தி வந்தார்.

குறிப்பாக கருணாநிதி எழுதிய ‘தூக்கு மேடை’ நாடகத்தை அவர் பலமுறை நடத்தினார். இந்த நாடகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருமுறை இந்த நாடகத்தை பார்க்க கருணாநிதி சென்றிருந்தார். நாடகம் முடிந்ததும் மேடையில் பேசிய எம்.ஆர்.ராதா ‘கருணாநிதிக்கு அறிஞர் என்கிற பட்டத்தை கொடுக்கிறேன்’ என சொல்ல, கருணாநிதியோ ‘அறிஞர் என்றால் அது அண்ணா மட்டுமே’ என சொல்ல, ‘சரி. பேரறிஞர்’ என ராதா கேட்க, ‘நான் அண்ணாவுக்கு மேல் கிடையாது’ என கருணாநிதி சொல்ல, ‘சரி கலைஞர்’ என சொன்னார் எம்.ஆர்.ராதா. அந்த பட்டத்தை கருணாநிதியும் ஏற்றுக்கொண்டார். அப்போது முதல் இப்போது வரை பலரும் அவரை கலைஞர் என்றுதான் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply