• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் செத்துப்போனா எப்படி படம் ஓடும்?… புதுசா எடுக்குறேன்னு வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்…

சினிமா

1962 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாசம்”. இத்திரைப்படத்தை டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கியிருந்தார்.

இயக்குனர் ராமண்ணா, இத்திரைப்படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரம் இறந்துவிடுவது போன்ற ஒரு காட்சியை எழுதி இருந்தார். அதை பார்த்த எம்.ஜி.ஆர், “இத்திரைப்படத்தின் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கிளைமேக்ஸில் எனது கதாப்பாத்திரம் இறப்பது போன்று இருக்கிறது. இதனை எனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். படம் நிச்சயமாக தோல்வியை தழுவும்” என கூறியுள்ளார்.

ஆனால் இயக்குனரோ “இது மிகவும் வித்தியாசமான கிளைமேக்ஸ். ஆதலால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்” என கூறியுள்ளார். எனினும் எம்.ஜி.ஆர் கிளைமேக்ஸை மாற்றும்படி கூறிக்கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனரோ கிளைமேக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என பதில் அளித்த வண்ணம் இருந்தாராம். ஆதலால் எம்.ஜி.ஆர் ஒரு வழியாக “பாசம்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

“பாசம்” திரைப்படம் வெளிவந்தபோது எம்.ஜி.ஆர் நினைத்ததுதான் நடந்தது. ஆம்! படம் படுதோல்வி அடைந்தது. ரசிகர்களின் கனவு நாயகனான எம்.ஜி.ஆர் படத்தில் இறப்பது போல் வரும் காட்சியை ஏற்க மறுத்தனர்.

மேலும் இயக்குனர் ராமண்ணாவுக்கு பல ரசிகர்கள், எம்.ஜி.ஆர் இறப்பது போல் திரைப்படம் எடுத்ததற்கு கண்டனங்கள் தெரிவித்து கடிதங்கள் எழுதினராம். இதன் பிறகுதான் ராமண்ணா, எம்.ஜி.ஆர் கூறிய விஷயத்தை புரிந்துகொண்டாராம். தமிழக மக்களின் புரட்சித் தலைவராக திகழ்ந்த எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதை யாராவது தன் கண்கொண்டு பார்ப்பார்களா என்ன??
 

Leave a Reply