• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியல்லே உங்களுக்கு எப்படி சம்பந்தம் ஏற்பட்டது?

சினிமா

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, தனிக் கம்பெனி ஏற்படுத்திக் கொண்டவர் எம். ஆர். ராதா.

 இருபத்தியேழு வருஷத்துக்கு முன், ஒரு ஸ்டண்ட் நடிகராகச் சினிமாவில் புகுந்தார். ஸ்ரீனிவாஸா மூவிடோனில் எடுக்கப்பட்ட ‘ராஜசேகரன்’தான் அவம் நடித்த முதல் படம்.

“அந்தக் காலத்திலே என்னை, ‘டக்ளஸ் பார்பாங்ஸ்ன்’னு சொல்லு வாங்க. அவர் நடிக்கிற படங்களையெல்லாம் ஒண்ணு விடாமெ பார்ப்பேன். அவர் மாதிரி ‘ஸ்டண்ட் வேலை’யெல்லாம் செய்யோணும்னு ஆசை. ராஜசேகரன்லே நடிக்கிற போது, பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளிக் கூடத்தின் மாடியிலேருந்து கீழே குதிச்சேன். கால் முறிஞ்சு போச்சு. இப்போ ‘ட்யூப்’ (Dupe) வெச்சு ‘ஸ்டண்ட்’ செய்யறாங்களே, அதெல்லாம் அப்போ தெரியாது. டைரக்டர் ‘குதிடா’ன்னாரு, குதிச்சுட்டேன்.”

"அப்புறம் படத்தை எப்படி முடிச்சாங்க?"  

“அதெல்லாம் கெட்டிக்காரங்க. க்ளோஸப்பா எடுத்து ஒரு மாதிரி கதையை முடிச்சுட்டாங்க .... கால் குணமாக நாலு வருஷம் ஆச்சு. அப்புறம் மாடர்ன் தியேட்டர்ஸ்லே சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி. ஆர். சுந்தரத்திற்கும் எனக்கும் சின்னத் தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோட வாழ முடியாதுன்னு தெரிஞ்சுது. இந்தச் சினிமாத்’தொழிலே வாணாம்னு அதுக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது ‘இரத்தக் கண்ணீர்’ சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரிலே நாடகம் போட்டுக்கிட்டிருக்கிற போது என்னை வந்து கூப்பிட்டாங்க். லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன்னேன். கொடுத்திாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்."  

“அரசியல்லே உங்களுக்கு எப்படி சம்பந்தம் ஏற்பட்டது?"

''நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக்கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஒடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது. ஒரு சமயம் நான் கொட்டகை வாடகை கொடுக்கல்லேன்னு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. ‘இவனும் நம்ம வேலையைத்தான் செய்யறான்னு ஒப்பனை மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு...”  

“தமிழ் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?'"  

“தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு ஆனா. ‘சப்ஜக்ட்’தான் ‘அட்வான்ஸ்’ ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஒட்டப் பாக்கறாங்க. சொந்தப் பணித்தைப் போட்டு டிக்கெட்டை வாங்கி இரண்டு வார்த்துக்கு "ஹவுஸ் புல்" போர்டு மாட்டிச் சந்தோஷப்படறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவா முன்னேற்றம்? நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நானும் சர்விஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப் பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?'

'' நீங்க, படத்திலே மூணு நாலு குரல்லே பேசறீங்களே. ஏன்?"

"அதென்னமோ எனக்குத் தெரியாது. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. நடிக்கறபோது இயற்கையாகவே அப்படி வந்துடுது. நான் வேணும்னு குரலே மாத்தறது இல்ல."

“நாற்பத்தைந்து வருஷமா நடிச்சுக்கிட்டு இருக்கீங்களே, ரிடையர் ஆகணும்னு உங்களுக்குத் தோணுவதே இல்லையா?”

“அது நம்மை விடற வரைக்கும் நாம் அதை எதுக்கு விடணும்?”

“நீங்க நடிக்கிற படங்களையெல்லாம் நீங்க பார்க்கிற வழக்கம் உண்டா ?”  

“நான் சினிமாவுக்கே போகமாட்டேன். ‘மதர் இந்தியா’‘தோ ஆங்கே பாரா ஹாத்’ பார்த்தேன். ரத்தக் கண்ணீர், ராஜாதேசிங்கு இப்படி இரண்டு மூன்று தமிழ் படம் பார்த்திருக்கேன்.”

“உங்க நாடகங்களில் அன்றாட அரசியலைப் பற்றியெல்லாம் அலசி எடுக்கறீங்களே, பத்திரிகை படிக்க உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?’’

“பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்குப் படிக்கவே தெரியாது. எழுத்துக்களே ' ‘கம்ப்போஸ்’ செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களே எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம் என்கிற படிப்புதான். வேறே பள்ளிக்கூடத்திற்கு நான் போனதில்லே.”  

“இந்த ஐந்தாறு வருஷமா உங்க நடிப்புக்கு ஒரு ‘மவுஸ்’ ஏற்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம்?"  

''அதென்னமோ! நான் என்னிக்கும் ஒரே மாதிரிதான் நடிச்சுக்கிட்டிருக்கேன். நான் நாடகத்திலே நடிச்சுக்கிட்டிருந்தபோது, என் கொள்கைகளையும் பிரசாரத்தையும் பிடிக்காதவங்க என்னைத்திட்டினாங்க. என் நாடகத்தைப் பார்க்காமலே, என்ன ‘கிரிடிஸைஸ்’ பண்ணினாங்க! இப்போ தான் ரொம்ப பேர் என் நடிப்பைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைச்சுது, புகழறாங்க. அதுக்கு நான் என்னா செய்யறது ?"  

"சினிமாவாலே சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடையாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதா படித்து விட்டு ‘இந்தத் தொழில்லே சம்பாதிச்சுகிட்டே அப்படிப்பேசுவது முறையா’ன்னு சில பேர் ஆத்திரப் பட்டாங்களே, உங்களுக்குத் தெரியுமா?’’  

"ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிறவனுக்குத்தான் அதிலுள்ள தீமையெல்லாம் தெரியும். அவன்தான் ‘அதாரிட்டி’யோட பேச முடியும். அதுலேயே இருந்துகிட்டு அதை திருத்தறவன்தான் தைரியசாலி!”

(“அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது!" என்ற தலைப்பில் 02.02.1964 தேதியில் ஆனந்த விகடன் இதழில் இருந்து...)

Leave a Reply