• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மணிவண்ணன் 

சினிமா


இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து, ‘ஜோதி’ (1983),  ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983), ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984), ‘ஜனவரி ஒன்னு’ (1984), ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984), ‘நூறாவது நாள்’ (1984), ‘அன்பின் முகவரி’ (1985), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987), ‘தீர்த்தக் கரையினிலே’ (1987), ‘புயல் படும் பாட்டு’ (1987), ‘கல்யான் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994), ‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994), ‘கங்கை கரை பாட்டு’ (1995), ‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது, தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.
ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.
இல்லற வாழ்க்கை
மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார்.

Sridhar Padmanaban
 

Leave a Reply