• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல நடிகையை தாக்கி பாடல் வரிகள் - நாட்டிய பேரொளிக்கு உதவிய கண்ணதாசன்

சினிமா

சிறுவயது முதலே முறையாக நாட்டியம் பயின்ற இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞர். பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவரான இவருக்கு நாட்டிய பேரொளி என்ற பட்டமும் உண்டு.

தமிழ் சினிமாவின் 1950-60 காலகட்டங்களில் நடனமாட தெரிந்த பல நடிகைகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் என்று சொல்லலாம். நடனம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தங்களுக்கென தனி பாணியை வகுத்து சறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை பத்மினி. சிறுவயது முதலே முறையாக நாட்டியம் பயின்ற இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞர்.

பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவரான இவருக்கு நாட்டிய பேரொளி என்ற பட்டமும் உண்டு. அதேபோல் இவர் நடிக்கும் படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருப்பது போல் இவரது நடனத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவர் பரதநாட்டியம் ஆடுவது போன்ற காட்சிகள் வைத்திருப்பார்கள். இவரது நடனத்தை பார்க்கவே அந்த காலத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய வரலாறு கூட உண்டு.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த பத்மினி, தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவாஜியுடன் இவர் நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் இன்றைய ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக உள்ளது. இந்த படத்தில் பாட்டிலேயே சிவாஜியை பத்மினி நலம் விசாரிப்பது இப்போது பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பத்மினிக்கு இணையாக வைஜெயந்தி மாலாவும் நடனத்தில் உச்சத்தில் இருந்தாலும், இவர்களுக்கு இடையில் அதிகமான போட்டி இருந்தது என்று சொல்லலாம். அதே சமயம் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்திலேயே கடந்த 1961-ம் ஆண்டு மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட பத்மினி அப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். பத்மினி சினிமாவில் இல்லாததால் அந்த இடத்திற்கு வந்த வேறொரு நடிகை, இயக்குனர் தயாரிப்பாளர் என யாரையும் மதிக்காமல் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் அவ்வப்போது சென்னை வந்த பத்மினியிடம் சிலர் இது பற்றி சொல்லி நீங்கள் மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்த மீண்டும் 1963-ம் ஆண்டு பத்மினி சினிமாவில் ரீ-என்டரி ஆகிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த காட்டு ரோஜா என்ற படத்தின் மூலம் பத்மினி ரீ-என்டரி ஆனார். சுப்பாராவ் இயக்கிய இந்த படத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.  

படத்திற்காக சுட்சிவேஷனை கண்ணதாசனிடம் சொன்ன இயக்குனர் சுப்பாராவ், ரீ-என்டரி ஆன பத்மினியை வரவேற்ப்பது போலவும், தற்போது பத்மினி இடத்தில் இருக்கும் அந்த நடிக்கையை சீண்டுவது போலவும் பாடல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை புரிந்துகொண்ட கண்ணதாசன், அதற்கு ஏற்றாற்போல் எழுதிய பாடல் தான்  ‘ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனைக் கண்டாயோ.. அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ’ என்ற பாடல்.

பத்மினியின் அழகை வர்ணிக்கும்படி ‘மொட்டாக நின்றவளே.. முள்ளோடு வந்தவளே.. முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே…கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட தளுத்து நின்றவளே.. என சரணம் எழுதினார். தொடர்ந்து அடுத்த சரணத்தில் ‘இரத்தின கம்பளமே அடி முத்திரை மோதிரமே நீ நாளைப் பொழுதுக்குள் வாடி விழுந்திடும் மாயக் கதையடியோ.. நான் சித்திர பெண்மையடி இது தெய்வ பருவமடி.. எத்தனை காலங்கள் மாறிய போதிலும் என்றும் இளமையடி எனக்கு..’ என அந்த நடிகையை பார்த்து பத்மினி பாடுவது போல சரணம் எழுதியிருந்தார்.

இந்த பாடல் அப்போது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பத்மினி சென்ற பின் மார்க்கெட்டை பிடித்த அந்த நடிகையும், கண்ணதாசன் பாடலில் மூலம் சொன்ன அந்த நடிகையும் நடிகை சரோஜா தேவி தான் என்று கூறப்படுகிறது.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply