• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்சில் திருவள்ளுவர் சிலை திறப்பு

தமிழர்களின் கலாச்சார சின்னமாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை பிரான்சின் Cergy நகரில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கவிஞரும், தத்துவஞானியும், நெறிமுறையாளருமான திருவள்ளுவரின் சிலை செர்ஜி நகரில் திறக்கப்பட்டது.
  
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜூலை மாதம் Bastille தினத்திற்காக Paris சென்றிருந்தபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இப்போது சிலை திறக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் தனது X பக்கத்தில் "பாஸ்டில் தினத்திற்கான தனது பிரான்சு பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியைச் செயலாக்கும் வண்ணம் இன்று பிரான்சின் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பெற்றது.

வள்ளுவம் கூறும் மேன்மையான கருத்துக்களை மக்கள் பின்பற்றி ஒழுகவும், நம்மிரு நாடுகளுக்கு இடையேயான நெடுங்கால கலாச்சார பிணைப்பின் அடையாளமாகவும் மற்றும் இந்தியா-பிரான்ஸ் நட்புறவின் சின்னமாகவும் இச்சிலை விளங்கும்." என்று பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகரில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சார உறவுகளுக்கு அழகான சான்று என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். திருவள்ளுவர் அறிவாற்றலையும் அறிவையும் குறிக்கிறது. அவரது படைப்புகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கணக்கான மக்களை ஊக்குவிக்கின்றன என்று கூறியுள்ளார்.

இந்த சிலை ஆயிரக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தமிழ் கலாச்சார சங்கம் (Tamil Cultural Association France) பரிசளித்த இந்த சிலை திறப்பு விழாவில் செர்ஜி மேயர் Jean-Paul Jeandon, புதுச்சேரி அமைச்சர் கே.லட்சுமிநாராயணா, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட பல அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டதாக, பிரான்ஸிற்கான இந்தியத் தூதர் Jawed Ashraf X தளத்தில் கூறியுள்ளார். 
 

Leave a Reply