• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிமல் வெற்றி - மகிழ்ச்சியில் அழுத நடிகர்

சினிமா

கடந்த டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" (Animal) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இவருடன் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

2023 ஆண்டிற்கான "முதல் நாள் வசூல்" சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தி திரையுலகில் தீபாவளி, பக்ரீத் போன்று விடுமுறை நாட்களில்தான் முன்னணி கதாநாயகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இது அவற்றின் வெற்றிக்கும் பெரிதும் உதவி வந்தது.

ஆனால், அனிமல் திரைப்படம், விடுமுறை இல்லாத சாதாரண வார நாளில் வெளியிடப்பட்டும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த சில நாட்களில், இந்தி திரையுலகின் பிற முன்னணி ஹீரோக்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்றோரின் இவ்வருட வெற்றி படங்களின் வசூலை அனிமல் தாண்டி விடும் என திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பாபி தியோல் கண் கலங்கி தனது உணர்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில் பாபி தியோல், "ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகின் மற்றொரு முன்னணி கதாநாயகனும், பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், "பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்" என பாராட்டியுள்ளார்.

தென்னிந்தியா, வட இந்தியா என பேதங்கள் இன்றி மக்கள் விரும்பும் திரைப்படங்கள் எந்த மொழியாக இருந்தாலும், நாடு முழுவதும் ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதும், அவை வசூலை அள்ளி குவிப்பதும் நல்ல முன்னேற்றம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Leave a Reply