• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொன்னாலை விவகாரம் - மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்

இலங்கை

யாழ் பொன்னாலை பரவைக் கடற்கரை பிரதேசத்தை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா கவலை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில்  வனவளங்கள் திணைக்களம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான 354 ஏக்கர்  கடற்கரையோர பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா ”பொன்னாலையில் உள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பொன்னாலை பரவைக் கடலையே தமது வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்றனர். மேலும் அதிக குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.

வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்கரையோரத்தை சுவீகரிக்குமாயின் கடற்றொழிலாளரின் சுதந்திரமான கடற்றொழில் பாதிக்கப்படும். எமது மக்கள் தாம் நினைத்த நேரம் நினைத்த பாதையால் கடலுக்கு செல்வார்கள். நினைத்த நேரம் வீச்சுவலை போன்ற தொழில்களுக்கு செல்வார்கள்.

வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்கரையை சுவீகரித்தால் தொழிலாளர்கள் இவ்வாறு செயற்பட முடியாது. கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

மேலும், பொன்னாலைக் கடலில் உள்ள மண் திட்டியான துருத்திப்பிட்டியையும் மேற்படி திணைக்களம் சுவீகரிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது.   இது கால்நடைகளில் மேச்சல் தரை. மாடுகள் கடல் பகுதியால் நடந்து சென்று இங்கு மேய்ந்துவிட்டு மாலையில் வீடு திரும்பும். அத்துடன் கடற்றொழிலாளர்கள் வலைகளை உலர்த்துவதற்கும் இந்த இடத்தை  பயன்படுத்துகின்றனர்.

எனவே வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கருதுவது போன்று கடலில் கண்டல் தாவரங்களை நாட்டுவதாயின் அதை எமது சமூகமட்ட அமைப்புக்கள் ஊடாக நாம் செயற்படுத்துவோம். அதை விடுத்து பொன்னாலையின் கடற்கரையை சுவீகரிப்பதற்கு நாம் அனுதிக்க மாட்டோம். தற்போதுதான்எம்  ஓரளவு நிம்மதியாக வாழ்கின்றனர். அந்த நிம்மதியை யாரும் குழப்பவேண்டாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply