• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரித்திரத்தில் ஒரு பக்கம். BBC - தமிழ் ஓசை - பிதாமகன்! சோசி

இலங்கை

இன்று ஒலிபரப்புக் கலையின் பிதாமகர் என்று போற்றப்பட்ட ஐயா சோ.சிவபாதசுந்தரம் அவர்களது 23வது நினைவுதினமாகும்.
ஐயாவை சந்தித்துப் பேசும் பாக்கியமும், அவரிடம் ஆசி பெறும் பாக்கியம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம் , ஊர்வாகற்துறையில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். யாழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர்  கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 

குரும்பசிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரிப் பத்திரிகையில் 1938ம் ஆண்டு 
ஆசிரியரானார்1942 வரை ஈழகேசரியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் "ஈழகேசரி இளைஞர் கழகம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து 200 இற்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்தார்.1942 இல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.
1941 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நிறுவனத்தில் தமிழ் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி நிறுவனம் சிவபாதசுந்தரத்தை அழைத்தது. 1947 செப்டம்பரில் இவர் அங்கு சென்று பணியில் சேர்ந்தார். 1948 இல் தமிழ் ஒலிபரப்பை ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இலண்டனில் இலங்கை தூதரகத்திலிருந்த குமாரசுவாமி, இந்திய தூதரகத்திலிருந்த பார்த்தசாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தப் பட்டது. அப்போது (1948இல்) பாரதியாரின் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாடலை வைத்து தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார்.
இலங்கை திரும்பிய பின்னர் சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்ஸ் நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்.
பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு "ஒலிபரப்புக் கலை" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலையத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு ராஜாஜி ஆசியுரை எழுதியிருந்தார்.இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
சென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தது[5].  சிவபாதசுந்தரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டார். இவர் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
ஐயா சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார்
ஐயா சிவபாதசுந்தரம் எழுதிய நூல்கள்.
மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (அல்லயன்ஸ் கம்பனி, மயிலாப்பூர், 1947)
ஒலிபரப்புக்கலை (1954)
கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் (1960)
தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977)
சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978)
ஐயா சிவபாதசுந்தரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டனில் காலமானார்.சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். திருமணம் 21 சனவரி 1946 இல் நடைபெற்றது.இவர்களுக்கு மஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் .
ஐயாவின் இந்த 23வது நினைவுதினத்தில் அவரது பாதம் பணிந்து ஆசி வேண்டுகிறேன்.
ஒலிபரப்புக் கலையின்
ஒளியாகத் திகழ்ந்து
தமிழோசை தன்னைத்
தரணியிலே ஒலித்தவரே !
ஈழத்து மண்ணீந்த
இனியதோர் மைந்தனம்மா
ஊடக வானத்திலென்றும்
உன்னதமாய் ஒளிர்பவரே !
தமிழகத்து மாப்பிள்ளையாய்
தனிப்பெருமை கொண்டவர்
தமிழ்மொழியின் சிறப்புக்காய்
தன்னுழைப்பை ஈந்தவரே !
ஊர்காவற்துறை மலர்ந்த
உத்த்மசீலர் நீங்களய்யா
ஈழகேசரி ஆசிரியராய்
ஈட்டிய பெருமையுடையோனே !
சிவபாதசுந்தரனார் மறைந்த
சிந்தைநிறை தினமின்று
ஐயாவின் நினைவுகளோடு
ஐயனைப் பணிந்திடுவோம்

 

சக்தி சக்திதாசன்!
 

Leave a Reply