• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா நகர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது: இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக அன்றைய தினத்தில் இருந்து, தற்போது வரை இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்குதலை தொடர்ந்து, கடந்து சில நாட்களாக தரைவழி தாக்குதலை விரிவு படுத்தி வந்தது.

இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காசா நகரை சுற்றி வளைத்து விட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, இஸ்ரேல் துருப்புகள் கருப்பு பைகளில் (கொலை செய்யப்பட்டு உடல்கள் கருப்பு பைகளில் வைக்கப்பட்டு) சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எச்சரித்துள்ளது.

காசா சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் குறித்த கருத்து மேசையில் இல்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காசா பகுதியில் சண்டை உச்சத்தை தொடும் என அஞ்சப்படுகிறது.

அகதிகள் முகாம், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக பெரும்பாலான அமைப்புகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேல், தாக்குதலை தொய்வின்றி நடத்தி வருகிறது.
 

Leave a Reply