• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதில் புதிய நடைமுறை

இலங்கை

வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறைக்கு வருகிறது.

இந்த முறைமையின் ஊடாக, வீட்டில் இருந்தவாறு இணையத்தின் ஊடாக கட்டணங்களை செலுத்தி, வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தவும் முறைகேடுகளைத் தடுக்கவும் அரச சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலகங்கள் உள்ளிட்ட ஒன்பது வகையான அரச நிறுவனங்களைத் தெரிவுசெய்து, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ஒன்பது முன்னோடி வேலைத் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் ஒன்லைன் முறையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்தை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தி அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக ஒன்லைனில் கட்டணங்களை செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply