ஐரோப்பிய நாட்டில் கொத்தாக பல ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை...
தங்கள் விருப்பத்திற்கு எதிராக கட்டாய கருத்தடைக்கு தள்ளப்பட்டதாக கூறி, ஐரோப்பிய நாடு ஒன்றில் சுமார் 67 பெண்கள் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர்.
கடந்த 1960 காலகட்டத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கிரீன்லாந்தை சேர்ந்த 67 பெண்கள் டென்மார்க் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர்.
பூர்வகுடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 4,500 பெண்களுக்கு கட்டாய கருத்தடை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் இளம் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை 2025ல் முடிவடையும் என்றே கூறப்படும் நிலையில், சில பெண்கள், சிலர் 70 வயதைக் கடந்தவர்கள் தற்போது இழப்பீடு கோரியுள்ளனர்.
தலா 300,000 kroner தொகையை (34,880 பவுண்டுகள்) இழப்பீடாக அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். 1953 வரையில் கிரீன்லாந்து டென்மார்க்கின் காலனியாக இருந்துள்ளது, தற்போது டென்மார்க்கின் அரை-இறையாண்மை பிரதேசமாக அறியப்படுகிறது.
பூர்வகுடி மக்களிடையே கட்டாய கருத்தடை முன்னெடுக்கப்பட்ட சம்பவம், கடந்த ஆண்டு வலையொளியாக வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் 13 வயது சிறுமிகளுக்கும் IUDs பொருத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவர டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்களால் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் முடிவுகள் 2025ல் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே தாங்கள் வயதானவர்கள் என குறிப்பிட்டு, இப்போதே இழப்பீடு வழங்க வேண்டும் என பெண்கள் குழு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் மக்கள் நலனுக்காக செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், கிரீன்லாந்தின் மக்கள்தொகை அளவைக் கட்டுப்படுத்த விரும்பிய டென்மார்க் அரசாங்கம் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.