• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமல் போன சிறுமி - முடுக்கி விடப்பட்ட மிகப்பெரும் தேடுதல் வேட்டை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது சரடோகா கவுன்டி பகுதி.

இங்கு சுமார் 6250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மோரு ஏரி மாநில பூங்கா (Moreau Lake State Park) எனப்படும் இயற்கை எழில் மிகுந்த சிறிய வனப்பகுதி. இயற்கை காட்சிகளும், பெரிய ஏரியும், அழகான மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும் உள்ளதால் இப்பகுதிக்கு பொழுதுபோக்கவும், அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சுற்றி பார்க்கவும் மக்கள் வருவது வழக்கம்.

அவ்வாறு சில தினங்களுக்கு முன் பொழுது போக்க ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வந்திருந்தனர். சார்லோட் சேனா எனும் அவர்களின் 9 வயது மகள் நேற்று முன் தினம் தனது சைக்கிளில் சுற்றி வர கிளம்பினார். கிளம்பி சென்றும் நீண்ட நேரம் திரும்பி வராததால் அவள் பெற்றோர் கவலையடைந்தனர்.

அச்சிறுமியின் தாய் த்ரிஷா, அவசர சேவை எண் 911-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையினை தொடங்கினர்.

விசாரணையில் அச்சிறுமியை அங்குள்ள லூப் ஏ (Loop A) பகுதியில் கடைசியாக அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் (Croc) காலணியுடன் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு பிறகு என்னவானார் என தெரியவில்லை.

இது குறித்து நியூயார்க் நகர கவர்னர் கேதி ஹோசல் தெரிவித்ததாவது:

அச்சிறுமியை தேடும் பணியில் 75 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாய்கள், விமான சேவை, வேட்டை நாய்கள் என அனைத்துவிதமான வளத்தையும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்வேறு சிறப்பு அதிகாரிகளும் இதில் பங்கு பெற்றுள்ளனர். டிரோன் சேவை, மற்றும் நீருக்கடியில் சென்று மீட்கும் படை சேவை உட்பட எல்லாவித வளங்களையும் உபயோகபடுத்தியுள்ளோம். பூங்காவில் அச்சிறுமி காணாமல் போன போது பரிமாறி கொள்ளப்பட்ட செய்திகள் குறித்தும் ஆராய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எந்த சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் தேடி வருகிறோம்.

இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

5 அடி 1 அங்குலம் உயரமும் 40 கிலோ எடையும் உள்ள அச்சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. அப்பகுதி முழுவதும் ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படும் குழந்தைகள் கடத்தல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply