• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.நாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் - அன்ட்ரூ ப்ரான்ஸிடம் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.  

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸ் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு முக்கிய தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றார்.

அந்த வகையில் மார்க்-அன்ட்ரூ பிரான்ஸுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழரசு கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பின்போது தமிழ்ச் சமூகத்தின் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும் விடயங்கள் குறித்தும், நாடு என்ற ரீதியில் பொதுவாக தாக்கங்களை ஏற்படுத்தும் விடயங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்று ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸ், இவ்விடயத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது பற்றி எதிர்வரும் காலங்களில் விரிவாகப் பேசலாம் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை அண்மைய காலங்களில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பகிரங்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுவரும் இனவாதக் கருத்துக்கள் மற்றும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த சிங்களமயமாக்கம் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய சம்பந்தன் தரப்பினர், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 
 

Leave a Reply