கணவருக்கு பாத பூஜை நடத்திய சகுனி பட நடிகை
சினிமா
தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரணீதா சுபாஷ், பீமான அமாவாசை பண்டிகையை முன்னிட்டு தனது கணவருக்கு பாதபூஜை செய்து வணங்கிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளிடையே அதிக கவனம் பெற்று வைரலாகி வருகின்றன.
கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ மற்றும் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிரணீதா சுபாஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை பிரணீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கதைக்களத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரணீதா, அன்பு மனைவியாகவும், பொறுப்புள்ள தாயாகவும் தனது குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறார்.
இந்நிலையில், தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி பீமான அமாவாசை பண்டிகையை முன்னிட்டு பிரணீதா தனது கணவருக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "பீமான அமாவாசை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பீமான அமாவாசை என்பது கர்நாடகாவிலும், தென்னிந்தியாவிலும் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை. அப்போது பெண்கள் தங்கள் கணவர் 100 ஆண்டுகள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.























