சென்னை ஆடம்பர வீட்டை விட 1700 சதுர அடி மும்பை வீடு மகிழ்ச்சியாக இருக்கிறது- நடிகர் சூர்யா
சினிமா
நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர நிகழ்வுகள் மற்றும் நேர்காணல்களில் படக்குழுவினர் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். இதையொட்டி நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யா, மும்பையில் உள்ள தனது குடும்ப வாழ்க்கை மற்றும் எளிமையான வீடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
"எனக்கு மும்பை வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட ஒரு விடுமுறை நாள் போலத்தான். நான் சென்னையில் தான் அதிகம் பணிபுரிகிறேன்; படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் மும்பைக்குச் சென்று விடுவேன். நாங்கள் மும்பையில் 1,700 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு சிறிய வீட்டில் தான் வசிக்கிறோம். படுக்கை அறைக்கு இரண்டு படிகள், வரவேற்பறைக்கு இரண்டு படிகள், சமையல் மற்றும் சாப்பாட்டு அறைக்கு இரண்டு படிகள் என மிகவும் அருமையான, வசதியான வீடு அது. அந்த வீடு எங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் அளவற்ற அன்பையும் தருகிறது.
வீட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் என் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோரை உடனடியாக அழைக்க முடியும்; அவர்கள் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் அங்கே என்ன செய்கிறோம் என்பது பலருக்குத் தெரியாது என்பதால், அந்த அமைதியான சூழல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்று அவர் கூறினார்.























