கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்பு
கனடா
கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது.
இந்நிலையில், 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
33 சதவீத மக்கள் வீடுகளுக்கான அடமானக் கடன் மற்றும் வாடகையைத் தங்களின் முக்கிய நிதிச் சுமையாகக் கருதுகின்றனர்.
இது தவிர, மின்சாரக் கட்டணம், வீட்டு பராமரிப்புச் செலவுகள் மற்றும் வெப்பமூட்டும் செலவுகளும் கனடா மக்களுக்கு அதிகளவு நிதி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
மளிகைப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அன்றாடச் செலவுகளில் வாழ்க்கைச் செலவு உயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் திடுக்கிட வைப்பதாக உள்ளது, என 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி மார்கரெட் சாப்மேன் குறிப்பிட்டுள்ளார்.
விலையேற்றம் தொடர்வதால், கனடா மக்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் நிதி நிவாரணம் கிடைப்பது கடினம் என்றும், இந்த உயர் விலைகளே நிலையாகத் தொடருமோ என்றும் கவலையும் சோர்வும் அடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.






















