• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் வீடுகளில் மதுபானம் தயாரிக்க அனுமதி - 158 ஆண்டு கால தடை நீக்கம்

அமெரிக்காவில் சுமார் 158 ஆண்டுகளாக அமுலில் இருந்த, வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கான தடையை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து இரத்து செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பை நியூ ஆர்லியன்ஸில் உள்ள 5வது அமெரிக்க சுற்றுவட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. வரி வசூலிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது போன்ற தடை அவசியமற்றது என்றும், இது அரசாங்கத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் நீதிபதிகள், தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீடுகளில் மது காய்ச்சுவதைத் தடுப்பது வரி வருவாயை அதிகரிக்காது, மாறாகக் குறைக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தர்க்கத்தைப் பின்பற்றினால் எதிர்காலத்தில் வீடுகளில் இருந்து செய்யப்படும் அனைத்து வேலைகளையும் வரி ஏய்ப்பு எனக் கூறி அரசாங்கம் தடுக்கக்கூடும் என நீதிபதி எடித் ஹோலன் ஜோன்ஸ் தனது தீர்ப்பில் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டுப் போருக்குப் பிந்திய மறுசீரமைப்பு காலமான 1868 ஆம் ஆண்டு மதுபான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இதுவரை இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், 'uobby Distillers Association' என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் அதன் நான்கு உறுப்பினர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், பொழுதுபோக்காகவும் வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர். இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் "தனிமனித சுதந்திரம்" மற்றும் "மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பு" தொடர்பான ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகின்றது.

எனினும், டிரம்ப் அரசாங்கம் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.   
 

Leave a Reply