• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்பே அன்பே நீ எந்தன் பிள்ளை...

சினிமா

அன்பே அன்பே நீ எந்தன் பிள்ளை, பூஜைக்கேத்த பூவிது, நானொரு சிந்து காவடி சிந்து, துள்ளி எழுந்தது பாட்டு, பாடறியேன், படிப்பறியேன், ஒரு ஜீவன் அழைத்தது, என் மேல் விழுந்த மழைத்துளியே, ஊ லலல்லா, தென்கிழக்கு சீமையிலே, மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு, கண்ணாளனே எனது கண்ணை, ஒவ்வொரு பூக்களுமே, இன்னிசை பாடி வரும் என இவர் பாடிய பாடல்களை எல்லாம் பென் டிரைவில் பதிந்து கேட்டால் மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கும்.

எந்த நேரமும் கேட்கத் தூண்டும் இனிய பாடல்கள் தான் இவை. 80களில் சின்னக்குயில் சித்ரா பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள் யாவும் மனது மறக்காதவை. நீ தானா அந்தக்குயில் படத்தில் பூஜைக்கேத்த பூவிது என்ற பாடல் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒரு காந்தக் குரல். எவரையும் எளிதில் வசீகரித்து விடும். அவர் யாரென்று தெரிகிறதா? வேறு யாருமல்ல. சின்னக்குயில் சித்ரா தான்.

இவர் மலையாளப்பாடகி தான் என்றாலும் தமிழை அவ்வளவு அழகாக உச்சரிப்பார். இதற்கு சாட்சியாக சிந்து பைரவி படத்தில் இவர் பாடிய பாடறியேன் படிப்பறியேன் என்ற ஒரு பாடலே போதும். இதற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா என 15க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி அசத்தியுள்ளார். 

1985ல் சின்னக்குயில் இசை கேட்டு, துள்ளி எழுந்தது பாட்டு, ஒரு ஜீவன் அழைத்தது ஆகிய முத்து முத்தான பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தார். 1997ல் கலைமாமணி விருதும் 2005ல் பத்மஸ்ரீவிருதும், 2011ல் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டமும், அதே ஆண்டு ஆந்திராவில் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர் விருதும் கிடைத்தது.

2004ல் ஆட்டோகிராப் படத்திற்காக இவர் பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் செம மாஸ். இதற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. 1996ல் மின்சாரக்கனவு படத்தில் பாடிய மானா மதுரை பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதும், 15 முறை கேரள மாநில விருதும், 6 முறை ஆந்திர மாநில விருதும், 4 முறை தமிழக அரசின் விருதும், 2 முறை கர்நாடக அரசின் விருதும் பெற்ற ஒரே பின்னணி பாடகி. 

இவர் 80கள் முதல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடகி என்றால் யாரும் மறுக்க முடியாது. இவரது வாழ்க்கையிலும் நெஞ்சைப் பிழியும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியது. துபாயில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தனது குழந்தையுடன் சென்றார்.

அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தன் ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கிப் பரிதாபமாக இறந்து போனார். இந்த இழப்பைத் தாங்க முடியாமல் பாடுவதையே சிறிது காலம் நிறுத்தி விட்டாராம்.
 

Leave a Reply