• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷிய தாக்குதலை தடுக்க மாட்டேன் - டிரம்ப்

2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

சில மாதங்களாக ராணுவ தளவாட கையிருப்பு குறைந்துள்ளதாக கூறி மேற்கத்திய நாடுகளிடமும், நேட்டோ (NATO) அமைப்பிடமும் உக்ரைன் உதவி கோரி வருகிறது.

ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உக்ரைனுடன் நிற்காமல் மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து பேசினார்.

அதில் டிரம்ப், தனது பதவிக்காலத்தில் நேட்டோ அமைப்பில் இருந்த ஒரு உறுப்பினர் நாட்டின் தலைவருடன் (பெயர் குறிப்பிடாமல்) அவர் நிகழ்த்திய கலந்துரையாடலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம், நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில், ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால், இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறி விடுவேன்.

நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

ரஷிய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை $110 பில்லியன் மதிப்பிற்கு அமெரிக்கா உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply