• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க எப்படி இவர்களால் முடிகின்றது?

இலங்கை

ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சில  நாடாளுமன்ற உறுப்பினர்களால் எவ்வாறு முடிகின்றது?” என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” கடந்த 2 நாட்களுக்கு முன்னர், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு படகுகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச நிதியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு சீசன் டிக்கெட்டைக்கூட இல்லாமல் செய்துள்ள இந்த அரசாங்க தரப்பினர், எப்படி மக்களின் பணத்தை கொண்டு, துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான படகுகளில் உல்லாச விருந்துபசாரத்தில் ஈடுபட முடியும்? அந்த படகுகளுக்கான எரிபொருள், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள், உணவு வகைகள் என அனைத்தும் அரசாங்கத்தின் செலவிலேயே வழங்கப்பட்டுள்ளன.

இது பொய்யல்ல. இதற்கான அனைத்து ஆதாரங்களும் காணொளியாகவே உள்ளன. வங்குரோத்து அடைந்துள்ள ஒரு நாட்டில் எப்படி, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இப்படி உல்லாசமாக விருந்துபசாரங்களில் ஈடுபட முடியும்? தனிப்பட்ட நிதியை செலவு செய்து, தனியார் இடங்களில் விருந்துபசாரங்களில் ஈடுபட்டுவது பிரச்சினையே கிடையாது. அது தனிப்பட்ட விடயமாகும்.

24 மணித்தியாலங்கள் கூட களியாட்டங்களில் ஈடுபடட்டும். ஆனால், துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான படகுகளை பயன்படுத்தி, அரசாங்கத்தின் நிதியில் இவர்கள் எப்படி விருந்துபசாரம் செய்ய முடியும். அந்த படகுகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற, செங்கம்பலமும் விரிக்கப்பட்டிருந்தது. இந்த அநியாயங்களை மக்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply