• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் நடைபெற்ற 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா

கனடா

கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா கடந்த திங்கட்கிழமை  (08-01-2024) மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கனடா தமிழ்க் கல்லூரி மற்றும் அறிவகம் ஆகிய தமிழ் மொழி கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்த கனடாத் தமிழ் மரபியல் நடுவத்தின் முக்கிய உறுப்புரிமை கொண்டவர்களாக உள்ளதால் நூற்றுக்கணக்கான தமிழாசிரியைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் கல்விச் சபை உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமைப்பின் சார்பில் பொன்னையா விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அங்கு விசேட விருந்தினர்களாக அழைக்கப்பெற்றிருந்த அரசியல் பிரமுகர்களின் உரைகளில் முக்கிய கருப்பொருளாக தமிழ் மரபுரிமை மாதம் மற்றும் இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்காக அந்த கொடிய அரசிற்கு தகுந்த தண்டனை அல்லது பொறுப்புக் கூறலை கொண்டுவர நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற விடயமும் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஆண்டிற்குரிய தமிழ் மரபுரிமை மாதக் கருப்பொருளாக கனடாத் தமிழ் மரபியல் நடுவம் அறிமுகம் செய்துள்ள 'நாட்டார் இயல்' என்னும் தலைப்பிலான பதாகை வெளியிடப்பெற்றது.

அதன் பிரதிகள் அங்கு வருகை தந்திருந்த பிரமுகர்களுக்கும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பெற்றன.   

மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இந்த விழாவில் கனடாவின் மத்திய அரசின் சார்பாக அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களும் மாகாண அரசின் சார்பில் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் மற்றும் உறுப்பினர் அரிஸ் பாபிகியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply