• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரின் இரட்டை வேட ஆசை... தொல்லை கொடுத்த பானுமதி : நாடோடி மன்னன் பிரச்சனை இதுதானா?

சினிமா

2 வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நாடோடி மன்னன் என்ற படத்தை அறிவித்த எம்.ஜி.ஆர் அதற்காக பல சோதனைகளை சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர் அரசியலிலும் தனது தடத்தை பதித்துள்ளார். அதே சமயம் இயக்குனராக அவர் இயக்கிய முதல் படத்தின் படப்பிடிப்பில் நடிகை பானுமதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கேரக்டரை பாதியில் முடித்து வைத்தார் எம்.ஜி.ஆர்

சிறுவயதில் நாடக நடிகராக இருந்து பின்னாளில் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் பல்வேறு தடைகளை கடந்து 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து சினிமாவில் தனது உயரத்தை அதிகரித்து கொண்ட எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

1950-காலக்கட்டத்தில் பல படங்களில் நாயகனாக நடித்து வந்த எம்.ஜி.ஆர், தனது பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முதலில் வெளியான படம் தான் நாடோடி மன்னன் இந்த படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். பல பிரச்சனைகளை கடந்து வெளியான இந்த திரைப்படம் எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

2 வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தி பிரிசனர் ஆப் ஜண்டா என்ற படத்தை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட நாடோடி மன்னன் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வந்த ஒரு சில நாட்களில் நடிகை பானுமதியும் இதே கதையை படமாக்கப்போவதாக அறிவிக்கை விட்ட நிலையில், எம்.ஜி.ஆர் அறிவிப்பு குறித்து தெரிந்துகொண்ட அவர், எம்.ஜி.ஆருக்கு போன் செய்து பேசியுள்ளார்.

இதில் இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்துவிட்டு ஷூட்டிங் கூட போக போகிறோம். நீங்கள் விட்டுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த கதையை படமாக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, அதனால் நீங்கள் விட்டுக்கொடுங்கள் என்று கேட்க, அவரும் முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த கதையின் மையத்தை மட்டும் தான் நான் எடுத்திருக்கிறேன். என்று எம்.ஜி.ஆர் சொல்ல, பானுமதியும் சரி என்று சொல்லி படத்தை தொடங்கியுள்ளனர்.

சில மாதங்கள் கழித்து எம்.ஜி.ஆரை தொடர்புகொண்ட பானுமதி அந்த கதையை படமாக்கும் முடிவை நாங்கள் கைவிட்டுவிட்டோம். நீங்கள் படமாக்குங்கள். நாங்கள் தயார் செய்த திரைக்கதையும் உங்களுக்கு தருகிறோம் என்று கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கிய நிலையில், இதில் மதனா என்ற கேரக்டரில் நடிக்க பானுமதியையே தேர்வு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார் எம்.ஜி.ஆர்.

படப்பிடிப்பு தொடங்கியபோது, பாடல் பதிவு ஒன்றில், இசையமைப்பாளர் டியூன் போட்டுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் சில திருத்தங்களை சொல்ல, அருகில் இருந்த பானுமதி தனக்கு இசை ஞானம் உள்ளது என்ற காரணத்தினால் நீங்கள் சொல்வது போல் செய்தால் இந்த ராகமே கெட்டுவிடும் என்று சொல்ல, சினிமாவுக்காக இந்த பாடல் தயார் செய்கிறோம். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும் ராகத்தை பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொல்ல, உங்களை விட எனக்கு இசையை பற்றி நன்றாக தெரியும் என்று பானுமதி கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் அங்கிருந்து கோபமாக வெளியே சென்ற நிலையில், அந்த பாடலும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பின்போது, ஒரு காட்சியில் நடிக்க ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்தபோது பானுமதி அங்கே வர மறுத்துவிட்டார். அதேபோல் ஒரு காட்சியை படமாக்கும்போது திருப்தி இல்லை என்பதால் எம்.ஜி.ஆர் ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் படமாக்கியுள்ளார். இதனால் கோபமான பானுமதி ஒரு நல்ல இயக்குனரை வைத்து படமாக்கலாமே எதுக்கு இந்த போராட்டம் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீங்கள் சிறந்த கதாசிரியர் தானே கதாநாயகி இல்லாமல் உங்களால் கதை எழுத முடியாதா என்று கேட்ட எம்.ஜி.ஆர் இது சரி வராது என்று கூறி பானுமதி கேரக்டரை அப்படியோ முதல் பாதி படத்துடன் முடித்துவிட்டு 2-வது பாதிக்கு சரோஜா தேவியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படி பல தடைகளை கடந்து வெளியான நாடோடி மன்னன் திரைப்படம் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply