• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிஸ்புல்லாவின் எல்லை தாக்குதல் பின்னணியில் ஈரான் உள்ளது - இஸ்ரேல்

1992ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இருந்து வருகிறது. அந்நாட்டில் அது ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்த்து வரும் இந்த அமைப்பு, மத்திய தரைகடல் பகுதியில் அந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க போராடி வருகிறது.

கடந்த அக்டோபர் 7 அன்று தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி 1400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று, 150க்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்து சென்ற ஹமாஸ் அமைப்பின் மீது போர் அறிவித்த இஸ்ரேல், அந்த அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ளது. இஸ்ரேலி ராணுவ படையினர் (IDF) பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 இது மட்டுமின்றி தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல், மும்முரமாக போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் வந்தால் எதிர் கொள்ளவும் தயார் நிலையில் உள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் (Rear Admiral) டேனியல் ஹகரி (Daniel Hagari) கருத்து தெரிவித்தார்.

அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

நாங்கள் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போரிட்டு வருகிறோம். எங்கள் கவனத்தை திசை திருப்ப லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஈரான் நாட்டின் தூண்டுதலால் ஈரானின் துணையுடன் நடைபெறுகிறது.

இவ்வாறு ரியர் அட்மிரல் குற்றம் சாட்டி பேசினார்.

Leave a Reply