• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சென்னை புறப்பட்ட ரஜினி - செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

சினிமா

ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்திற்கு 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

பின்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் 3 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

அந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். ரசிகர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தார். அப்போது அவருடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

படப்பிடிப்பை முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். குமரி மாவட்டத்தில் சினிமா படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டார். அவர் கார் மூலம் ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது ஓட்டலின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் காரில் இருந்த ரஜினிகாந்துடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்பு நடிகர் ரஜினிகாந்த் காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். 

Leave a Reply