• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்தேகமில்லாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியே ஆக வேண்டும்.

சினிமா

ஆங்காங்கே கண்ணில் படும் சிறு சிறு துணுக்குகளைத் தவிர சத்தியமாக கடந்த  ஆறுமுறையும் ஒரு பிக் பாஸ் காட்சியைக்கூட இதுவரை முழுமையாக நான் பார்த்ததில்லை.  நிலமை இப்படி இருக்க,  இம்முறை பவா பிக் பாஸ் வீட்டுக்குள் போயிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு முழுமையான எபிசோட்களை, அது ஒளிபரப்பப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்ட பிறகு பார்த்தேன். 

இந்நிலையில் பவா பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறினாலும் அவரைப்பற்றிய உரையாடல்கள் ஓயவில்லை  என்பதால் இதை எழுதுகிறேன். ( இதுவே பிக் பாஸ் பற்றிய எனது கடைசிப் பதிவாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.) 

பிக் பாஸ் ஒரு விளையாட்டு. என்றாலும் அந்த விளையாட்டின் பணயம் வைக்கும் பொருளாகக் கலந்துகொண்டவர்களின் தன்மானம் முன்னிறுத்தப்படுவதில் எந்த நியாயமும் இல்லை.  இது ஒருவகையில் செத்துச் செத்து விளையாட அழைக்கும்  விளையாட்டுதான். இரண்டு பேர் இருக்கும்போது உங்களில் யார் ஒருவர் கெட்டவர் என்று கேட்டால் சந்தேகமில்லாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியே ஆக வேண்டும். 

அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் நடக்க முடியாமல் ஒருவன், நோயாளியாக படுத்த படுக்கையில் இருந்தால்கூட எச்சில் துப்ப மனம் வராது. அப்படி இருக்கும்போது பவா எப்படி எச்சில் துப்பி இருப்பார்?. இது எனக்கே இருந்த சந்தேகம்தான். 

ஆனால், இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அவர் எச்சில் துப்பியதாக ஏதேனும் காட்சிகள் காட்டப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.  எச்சில் துப்பியதாக ஒரு குற்றச்சாட்டு மட்டுமே வைக்கப் படுகிறது, அவ்வளவுதான்.  தயவு செய்து யாராவது எச்சில் துப்பிய காட்சியைப் பார்த்திருந்தால் கருத்திடவும். இல்லை என்றால் நிகழ்ச்சியை நடத்தும் சேனல் வெளியிடும் என்று நம்புவோம். 

அதேபோல படிப்பு சார்ந்த  ஒரு விசயம். எப்போதுமே ஒரு கலைஞன் அந்த நேரத்துக்கு யாருக்கு ஆறுதல் தேவைப்படுகிறதோ, யார் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறாரோ அவரின் பக்கம் நிற்பான்.  படிப்பு சார்ந்த உரையாடலில் பவா நின்றதும் அப்படியே. அந்த நேரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்த ஜோவிகா பக்கம் நின்றார்.  ஒன்னும் பிரச்சினை இல்லை. படிக்காத எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்று ஆறுதலுக்காக சில உதாரணங்களைச் சொன்னார். அவ்வளவுதான். அதுதான் அந்த நேரத்து நியாயம்.  அது ஒரு குழந்தைக்குத் தந்தையின் ஆறுதலைப் போன்றது.  ஆனால் உடனடியாக இதுவும் விவாதப் பொருளாக மாறிவிட்டது.

தனது மேடைகளில் கதைகள் சொல்லி முடித்ததும் மறக்காமல் இந்த நாவலை வாங்கிப் படிங்க என்று சொல்லும் பவா படிப்புக்கு எதிரான மனநிலை கொண்டவராகச் சித்தரிக்கப்பட்டதும்  வேடிக்கைதான். இத்தனைக்கும் பவா பலரின் படிப்புக்கு நேரடியாக உதவி வருகிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

Vediyappan M Munusamy

Leave a Reply