• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிறப்புரிமை குடியுரிமை வழிமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் விவேக் ராமசாமி

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் பதவிக்கு தீவிரமாக போட்டியிடுகின்றனர். டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால் அவர் பதவிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளார். பல ஊர்களுக்கு சென்று தனக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் விவேக் ராமசாமி அகதிகள் குடியுரிமை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் "பர்த்ரைட் சிடிசன்ஷிப்" (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் ரத்து செய்து விடுவேன். அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், நான் அந்த திருத்தத்தை படித்திருக்கிறேன். அதன்படி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான். இவ்வாறு அவர் கூறினார். "இதுவரை 14-வது சட்ட திருத்தம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை" என கூறும் மற்றொரு குடியரசு கட்சியின் போட்டியாளரான டிம் ஸ்காட், விவேக்கின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பாக இந்திய மென்பொருள் மற்றும் உயர் தொழில்நுட்ப பணிகளில் உள்ளவர்கள் பலரும் அடைய துடிக்கும் ஹெச்-1பி விசா எனப்படும் அந்நாட்டில் குடியேறி பணி செய்ய அனுமதிக்கும் வழிமுறையை விவேக் ராமசாமி ரத்து செய்து விடுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply