• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகளாவிய வளர்ச்சி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், புத்தாக்கம் முக்கிய பங்காற்றும்

இலங்கை

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறும் ஜி77 மற்றும் சீன அரச தலைவர் மாநாட்டில் நேற்றைய தினம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடிகள் போன்றவை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, அந்த நிலைமையை, உலகளாவிய கடன் நெருக்கடி மேலும், அதிகரிக்கச் செய்வதுடன், அதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலை, உலகளாவிய ரீதியில் தெற்கில் உள்ள நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிக செலவு காரணமாக சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள், நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது.

அந்த இடைவெளியைக் நிரப்புவதற்காக, டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பவியல் மற்றும் மரபணு வரிசைமுறை போன்ற புதிய தொழில்நுட்பங்களை நோக்கி விரைவாக செல்ல வேண்டியது அவசியமாகும எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply