ஐரோப்பாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் கனடா ஐரோப்பிய ஒன்றியம்
கனடா
கனடாவுடன் இதுவரை இல்லாத வகையில் மிகவும் வலுவான மற்றும் 'தனித்துவமான' புதிய கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஜெனிவீவ் டட்ஸ் தெரிவித்துள்ளார்.
கனடிய பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத ஒரு நாட்டின் தலைவருக்கு இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஒரு அரிதான நிகழ்வாகும். இந்த விஜயத்தின் போதே புதிய கூட்டாண்மை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இந்த புதிய கூட்டாண்மையானது சுவிட்சர்லாந்து, நார்வே அல்லது பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகவும் ஆழமான உறவை ஏற்படுத்துவதே கனடாவின் முதன்மை நோக்கமாகும்.
அடுத்த வாரம் நடைபெறும் சந்திப்பில் முழுமையான ஒப்பந்தம் எட்டப்படாது என்றும், ஆரம்பக்கட்ட கருத்துப் பரிமாற்றங்களே நடைபெறும் என்றும் தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய உறுப்பு நாடுகள் மற்றும் கனடாவின் மாகாணங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அக்டோபர் இறுதியில் கனடாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
முக்கியமான கனிம வளங்கள், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் கூட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் இரு தரப்பும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
"நாங்கள் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம்; மேலும் நெருங்குவோம்" என ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஜெனிவீவ் டட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






















