பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்
இலங்கை
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஆலயத் திருவிழாவிற்காக தற்காலிக திறக்கப்பட்ட குறித்த பாதையானது நேற்றையதினம் மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை தொடர்புகொண்டு வினவியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பாதையானது நிரந்தரமாக திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.
மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.





















