தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கை
இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றுஅலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இத்தூதுக்குழுவினர் பிரதமருக்கு விளக்கமளித்ததோடு, பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் பாதுகாத்தல், முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது சுயாதீன சட்டரீதியான நிறுவனம் இந்த தேசிய மகளிர் ஆணைக்குழுவாகும் என்பதை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஆணைக்குழு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியதோடு, இலங்கையில் பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் ஆகியன தொடர்பில் ஆணைக்குழு முன்னின்று உழைப்பதைப் பாராட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ExecutiveBranch
இந்த நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம், ஆணையாளர்களான ஜெயந்தி குருஉதும்பால, ஜனஹா செல்வராஜ், கலாநிதி பத்மா குணரத்ன, எம்.யு. கயானி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.டி.ஆர். ஒல்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.






















