கனடாவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை - 33 பேர் கைது
கனடா
கனடாவின் யார்க் பிராந்தியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களைத் திருடிய கும்பலைச் சேர்ந்த 33 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது மொத்தம் 337 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யார்க் பிராந்திய காவல்துறை (YRP), இப்பகுதியில் அதிகரித்து வந்த வீடுபுகுந்து திருடும் சம்பவங்களைத் தடுக்க கடந்த 2025 நவம்பர் 1-ம் திகதி 'புராஜெக்ட் போர்டிஸ்' என்ற பெயரில் ஒரு சிறப்புப் புலனாய்வு விசாரணையைத் தொடங்கியது.
நான்கு மாதங்கள் நீடித்த இந்த தீவிர விசாரணையின் முடிவில், யார்க் பிராந்தியம் மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதி (GTA) முழுவதும் கைவரிசை காட்டி வந்த கொள்ளைக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டன.
சுமார் 125-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த கும்பலிடமிருந்து, நகைகள் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட 2 மில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்களில் பல ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எனினும், இன்னும் கணிசமான பொருட்கள் உரிமை கோரப்படாமல் காவல்துறையிடம் உள்ளன.
2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் வீடுகளில் திருட்டுச் சம்பவங்களை எதிர்கொண்ட பொதுமக்கள், காவல்துறையினரால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதில் தங்களின் பொருட்கள் இருப்பதை அடையாளம் காணும் பட்சத்தில், உடனடியாக யார்க் பிராந்திய காவல்துறையின் ஒருங்கிணைந்த சொத்துக் குற்றப்பிரிவைத் (Integrated Property Crime Task Force) தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 'Crime Stoppers' மூலம் அநாமதேயமாகத் தகவல் வழங்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.























