புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்
இலங்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் தடையின்றி பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, இன்று (11) முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ குறியீட்டு முறையைப் பின்பற்றப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்தத் தகவலை வெளியிட்டார்.
எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தளர்த்தப்பட்ட போதிலும், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது:
அதன்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண் மற்றும் இரட்டை எண் (Odd/Even) அடிப்படையில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்.
பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டுமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18-ஆம் திகதிக்குப் பின்னர் வழமை போன்று ‘QR’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















